29 April 2014

தமிழரை காட்டி கொடுத்த பெரியார்

பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய பார்வை என்பது கன்னட,தெலுங்கு,மலையாளிகள் உள்ளிட்ட மாற்று இனத்தவர்கள் மட்டுமே தமிழர்களை மொட்டை அடிக்க குத்தகை எடுத்தவர்கள் என்பதை இந்த கட்டுரை ஆணித்தரமாக நிரூபிக்கும்.



தமிழரை காட்டி கொடுத்த பெரியாருக்கு தமிழ் மண்ணில் இருக்கும் சிலைகளில் ஒன்று

தமிழுக்கும், தமிழிய(திராவிட) மொழிகளுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு, இயற்கைக்கும் அறிவியலுக்கும் என்றும் பொருந்தவே பொருந்தாது. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைப்படி பால்,தயிர்,மோர் இவை மூன்றும் ஒன்றே.....!!! புரியவில்லையா....? வாசியுங்கள்.

பெரியாரின் கருத்துப்படி பழைய சென்னை மாநிலத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய தனித்தனி மொழிகள் கிடையாதாம்! அவை யாவுமே தமிழ் தானாம்! ஆகவே, தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் துளுவும் தமிழில் இருந்து தோன்றவில்லையாம். அவை யாவும் போக்குவரத்து குறைவு, தட்ப வெட்ப வேற்றுமை ஆகியவற்றால், தமிழே பல்வேறு வகைகளில் பேசப்பட்டமையால் வந்த தமிழின் வடிவங்கள் மட்டுமாம்!  தலை சுற்றுகிறதா? பெரியார் எழுதியதை படியுங்கள்.

"தமிழன்,தெலுங்கன்,கன்னடியன்,மலையாளி ஆகியோர் பேசுவதெல்லாம் தமிழ் தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழி என்று கூறுபவன் தமிழ்மகன் அல்லன்;தமிழை அறியாதவன்;ஆரியத்துக்கு சோரம் போனவன்;நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய மேலாண்மைக்கு ஆக்கம் தேட முயற்சிப்பவன். இந்த நான்கும் வேறுவேறு மொழிகள் என்று கூறுபவர்கள் 'தமிழர் என்று தம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; கருதிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று கூறலாமே ஒழிய இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

நம் புலவர்களில் சிலர், இந்த நான்கும் ஒன்றில் இருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த அக்கை தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பது தான் என் கருத்து. இத்திராவிட தாய்க்கு பிறந்தது ஒரே ஒரு மகள் தான்; அது தான் தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கின்றோம். நான்கு இடங்களில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய, நான்கிடத்திலும் பேசப்படுவது தமிழ் தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு; ஒன்று தான் நான்காக,நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை மெய்ப்பித்து காட்டவும் முடியும்" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80) என்றும்,

"ஒன்று நான்கா வகுக்கப்பட்டது என்பதற்கும், ஒன்றில் இருந்து நான்கு பிறந்தன,கிளைத்தன என்பதற்கும் வேற்றுமை உண்டு. ஆகவே, தமிழ் நீண்ட தொடர்பற்ற காரணத்தால் நான்காகப் பிரிந்து இருக்கிறதேயன்றி, தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தோன்றியவை அல்ல;உண்டாக்கப்பட்டவை அல்ல என்று திராவிடர்கள் உணர வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் ஒழிய, இந்த நான்கு நாட்டாருக்குள்ளும் வேற்றுமை உணர்வு தோன்றாமல் இருக்காது. இந்த நான்கும் தமிழ்மொழியே தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

இப்படி இயற்க்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை கூறியதோடு மட்டும் இன்றி, தமிழ் புலவர்களை இன்னும் ஒரு படி மேலே சென்று மட்டம் தட்டுகிறார்.

"தெலுங்கர்,கன்னடியர்,மலையாளிகளுக்கு உள்ள மொழிப்பற்றில், மொழி உணர்ச்சியில் தமிழ் புலவர்களுக்கு நூறில் ஒரு பங்கு கூட இல்லை" -- (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

"மற்றும் தெலுங்கர்,கனடியர்,மலையாளி இவர்களை தமிழர்கள் ஆக்க வேண்டும் என்றால், 'திராவிடர்' என்று சொல்லித் தான் ஆக்க முடியும்; 'திராவிடமே தமிழ்; தமிழே திராவிடம்' என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக!" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

நிற்க.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பும், முன்பும் இங்கே தாய் தமிழ் மண்ணில் தமிழர்கள் அல்லாதோர் ஆதிக்கமே இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய சிந்தனை என்பது தமிழரை காலம் காலமாக மற்றவர்களிடம் காட்டி கொடுக்கும் ஒரு செயல் என்பதை நிறுவ இதுவே போதுமானது.

இருப்பினும், உண்மையில் பெரியார் 'என்னால் நிரூபிக்க முடியும்' என்று கூறினாரே, அந்த அடிப்படையில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மட்டும் தானா திராவிட மொழிகள் என்று அவர் கூறியது உண்மை தானா என்பதை தமிழர்கள் உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். உண்மையில் தமிழில் இருந்து உருவாகிய மொழிகள் சுமார் 60க்கும் மேல். அவற்றில் ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

* தமிழுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://www.faculty.ucr.edu/~legneref/bronze/dravid.htm

* தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://en.wikipedia.org/wiki/Dravido-Korean_languages

தமிழுக்கும், சப்பான் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
http://japanese-dravidian.blogspot.in/

* தமிழுக்கும், சிங்கள மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு
"Rev. S. Gnanapiragasam - `There are more than 4,000 Tamil words in the Sinhala vocabulary. If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language."
Ref: http://www.lankanewspapers.com/news/2007/10/20510_space.html

ஆகவே தமிழில் இருந்து உதித்த மொழிகள் பல இருந்தும், திராவிட மொழிகள் எனில் அது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மட்டுமே என்றும், இவை நான்குமே தமிழ் தான் என்றும், அதை தம்மால் நிரூபிக்க இயலும் என்று மார்தட்டிய பெரியாரின் நோக்கம் தமிழர் அல்லாதோரிடம் தமிழரை காட்டி கொடுப்பது மட்டுமே......மட்டுமே.....மட்டுமே.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்


பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ,தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை. ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.



விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்,
"நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்?  என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல;அரசியல் சிக்கல் தான்!"

குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்,
"இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி,வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்".

""---- தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது"

பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்,
"காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763

ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
"தமிழ் ஒரு 'நியூசென்ஸ்'! தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார்,ப.414

"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477

விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை! நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்),ப.59

தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,
"இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால்,(இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள்  என்று உறுதியோடு கூறுவேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.

"இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....!!!

ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி "மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை" என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.

"இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது?" என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.
"இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

"ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.

தமிழர்களே,

'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி. தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்.

வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு.....!!! வளர்க அவரின் புகழ்.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்